Friday, December 23, 2011

சாமியே சரணம் ஐயப்பா...

                                           சாமியே சரணம் ஐயப்பா..
                                            -----------------------------------
                மோகன் ஜியும்  சுந்தர்ஜியும் சபரிமலைப் பயணம் என்று கேள்விப்பட்டதும் என்னுடைய இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. முதல் முறையாக 1970-ம் வருடம் சபரி மலைக்கு மகர ஜோதி காணச் சென்றிருந்தோம். மகர ஜோதியை ஆண்டவனின் ஜோதிஸ்வரூபமாய் நினைத்து கண்கலங்கி ,மெய் விதிர்த்து விம்மி விம்மி அழுதது , 1971-ம் வருடம் மீண்டும் அதே அனுபவம் பெற என்னைத் தூண்டி  48 நாட்கள் கடும் விரதம் இருந்து , இம்முறை என் மூத்த மகனையும் ( அப்போது அவனுக்கு ஐந்து வயது ) கூட்டிக் கொண்டு எங்கள் குருஸ்வாமியுடன் BHEL –ல் இருந்து சுமார் 40 பேருடன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பஸ்ஸில் பயணப் பட்டோம். வயதானவர்களும் குழந்தைகளும் இருந்ததால் நேராக பம்பாவிலிருந்து மலை ஏற திட்டமிடப்பட்டது. கன்னி சாமிகளும் இருந்ததால் எருமேலி சென்று பேட்டை துள்ளிப் பின் பம்பா செல்ல தீர்மானிக்கப் பட்டது. போகும் வழியில் ஆலய தரிசனமாக நிறையவே கோவில்களுக்குச் சென்று எருமேலி போய்ச் சேர்ந்தோம். அப்போது எங்களை ஏற்றி வந்த பஸ் ட்ரைவர் பம்பா செல்லப் பெர்மிட் இல்லை என்றும் எருமேலியிலிருந்தே எங்களை திரும்பக் கூட்டிச் செல்வதாகவும் சொன்னார். என்னவெல்லாமோ தாஜா செய்து ( என்ன.. பணம் கொடுத்துத்தான் )ஒரு வழியாக பம்பா சென்று மலை ஏறி அய்யப்பன் தரிசனம் முடித்து திரும்பினோம். (இதை சொல்லவா இவ்வளவு பீடிகை. என்று நினைப்பது தெரிகிறது. ) இனிமேல்தான் கதையே. திரும்பும்போது குருவாயூர் வந்து நிர்மால்ய தரிசனம் காண திட்டம். இரவு சுமார் ஒரு மணியளவில் குருவாயூர் வந்தோம். சிறிது நேரம் கண்ணயர்ந்து பிறகு நிர்மால்ய தரிசனம் காணலாம் என்று நாங்கள் சிலர் பஸ்ஸிலேயே இருந்து விட்டோம். மற்றவர்கள் அங்கு நடை பெற்றுக்கொண்டிருந்த ‘கிருஷ்ணாட்டம் “ காணச் சென்றனர். அப்போது ஆஜானுபாகுவாக ஒருவர் எங்கள் பஸ்ஸில் ஏறினார், SORRY, ஒருவர் என்றுசொன்னது தவறு. ஒரு ஐயப்பஸ்வாமி ( நன்றாகக் குடித்திருந்தார் ) பஸ்ஸில் ஏறி , மலையாளத்தில் மிக நேர்த்தியான கெட்ட வார்த்தைகள் கூறிக்கொண்டே,பஸ்ஸின் சீட்டைக் கத்தியால் கீறி கிழித்துக் கொண்டிருந்தார். முரட்டு உருவத்துடன் இருந்த அவரிடம் நல்ல வார்த்தைகளில் பேசிப் பிரயோசனம் இல்லாதிருந்ததால்  அங்கே அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டது. யாரும் வரவில்லை. அவரை வண்டியிலிருந்து கிழே இறக்கி விட்டு எங்களைப் போகச் சொன்னார்கள். இதற்குள் சிலர் அவரிடமிருந்த கத்தியை எடுத்துவிட்டால் அபாயமில்லை என்று கருதி  மெல்ல அவரிடம் பேச்சுக் கொடுத்து அவரைப் படுக்க வைத்தனர். சற்று நேரம் கழிந்ததும் மெள்ள அவரிடமிருந்த கத்தியை எடுக்க முயற்சி செய்யும்போது , திடீரென்று அவர் அருகிலிருந்தவரை காலால் எட்டி உதைத்து கத்தியால் குத்த வந்தார்.
கூட இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு அவரை அமுக்கிப் பிடித்து அவருடைய துண்டாலேயே அவரைக் கட்டி கொஞ்சம் ஆத்திரம் தீரப் புடைத்தனர் பிறகு அவரை பஸ்ஸிலிருந்து கீழே இறக்கி பஸ்ஸை நகர்த்த முயன்றனர்.

                      அது கடை வீதியாக இருந்ததாலும் ஜன சந்தடியாக இருந்ததாலும் கூட்டம் கூடிவிட்டது. சிறிது நேரத்தில் “ ஒரு மலையாள ஐயப்பசாமியை தமிழம்மார்  அடிச்சுட்டுப் போகுன்னு “ என்று ஒரே களேபரமாகி பஸ்ஸைச் சுற்றி கலவரம் எழுந்தது. எங்களில் யாரையும் இறங்க விடாமலும் ஏற் வருபவரை அனுமதித்தும் கூச்சலும் குழப்பமுமாக “ பஸ்ஸின் காற்றை இறக்கவும் பஸ்ஸுக்குள் மண்ணை வீசி குத்து கொல்லு என்று கத்தவும் தொடங்கினர். அப்போது எங்கள் குருசாமி , அவரும் நல்ல பெர்சனாலிடி, வந்து என்ன செய்யலாம் என்று பேசலாம் என்றார். அதற்குள் அங்கு ஒரு தலைவன் உதயமாகி இருந்தான். ஐய்யப்பசாமி வைத்திருந்த பணம் காணாமல் போய்விட்டதென்றும் அதை ஈடு செய்து நாங்கள் செல்லலாம் என்றும் உத்தரவு இட்டான். தரிசனம் எல்லாம் முடிந்து திரும்பும் எங்களிடம் இருந்த எல்லாப் பணத்தையும் (சுமார் ரூ.300-/ தேறியது என்று நினைவு )அந்தத் தலைவனிடம் கொடுக்க உடனே அவன் “ போலாம்..ரைட் “ என்று உத்தரவிட தலை தப்பியது என்று நாங்கள் திரும்பினோம்.



            அன்றிலிருந்து எனக்கு ஐயப்ப சாமிகள் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் கணிசமாகக் குறைந்து விட்டது. அதன் பிறகு பத்தாண்டுகளுக்கு முன் என் பேரன் மகன் மனைவியுடன் சபரிமலைக்குச் சென்றுவந்தேன். வசதிகள் கூடிவிட்டன. சபரிமலைப் பயணம் அவ்வளவு கடினமல்ல என்று தோன்றுகிறது. ஆனால் கூட்டம் கும்மி யடிக்கிறது.


          என்னவெல்லாமோ எழுத மனம் விழைகிறது. ஆனால் உண்மை 
பக்தர்கள் மனம் நோகுமே என்று தவிர்க்கிறேன்.
------------------------------------------------------------                          

12 comments:

  1. நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. //எனக்கு ஐயப்ப சாமிகள் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் கணிசமாகக் குறைந்து விட்டது//

    சாமியார்களே தவறாகிப்போகும் காலம் gmb sir. :(

    வேதனை தான். :(

    ReplyDelete
  3. மாலை போட்டாலும் போடாவிட்டாலும் மனதிலுள்ள மிருகம் சிலருக்கு வெளியே வந்து தாண்டவமாடும் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம் ஐயா.வர வர உங்கள் பதிவுகளில் சுவாரஸ்யம் கூடுகிறது ஐயா.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. விரதம் இருக்க முடியாதவர்கள், மனக் கட்டுப்பாடு இல்லாதவர்கள் தமிழன், மலையாளி என்ற பேதம் பார்ப்பவர்கள் இவர்களைச் சந்தித்திருந்தால் மனம் வெறுத்துத்தான் போகும். நாம் சந்திக்கும் நபர்களும், அவர்களுடனான நம் அனுபவங்களும் நம் அபிப்ராயத்தை மாற்றுகின்றன. பக்தி என்பதைத் தாண்டி உடல், மனக் கட்டுப்பாடு என்ற வகையில் உள்ள இந்த நல்ல விஷயத்தை இவர்கள் போன்றவர்கள் கெடுக்கிறார்கள்.

    ReplyDelete
  5. சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் முதன் முறையாக நான் மலைக்கு சென்றேன். முறையாய் விரதமிருந்து சென்றேன். பலர் புகைத்துக் கொண்டும் தண்ணி அடித்துக் கொண்டும் மலைக்கு வந்ததை கண்ணுற்றேன்.
    ஏனோ இன்றுவரை மறுமுறை செல்லும் எண்ணம் வரவில்லை.

    ReplyDelete
  6. நானும் ஒருமு றை போய் வந்தேன்
    அதிலிருந்து கொஞ்சம் பக்தி குறைய ஆரம்பித்துவிட்டது
    நல்லவைகளைப் பதிவு செய்தல் போல
    இது போன்ற விஷங்களையும் பதிவு செய்தலே நல்லது
    புதியவர்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கைப் பதிவுகள்
    நிச்சயம் நல்ல வழிகாட்டியாக இருக்கும்
    பகிர்வுக்கு நன்றி த.ம 1

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா!
    சபரிமலை அனுபவங்களையும் இடையில் நடந்த விடயங்களையும் அசைபோட்டுச் செல்கின்றீர்கள்!
    உண்மையில் இப்போது பம்பா கொஞ்சம் சீரலிந்து வருவது ஐயப்பனுக்கு சங்கடமான செயல்தான் அதிகம் கட்டுப்பாடு இல்லாத குடி,புகைத்தல் ,இன்னும் சில காரணங்களால் ஐயப்பசாமிமார் மீது ஒருவித குற்றப்பார்வை பலருக்கு! 

    ReplyDelete
  8. நல்ல அனுபவம்!
    நல்ல பதிவு!
    பலருக்கு இது பாடமாக அமையும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. சாதாரணமாக கொவிலுக்குப் போவதும் சபரிமலைக் கோவிலுக்குப் போவதும் வித்தியாசப் படுகிறது. சபரிமலைப் பயணம் மேற்கொள்ளும் முன் கடைபிடிக்கும் விரதங்கள் ஒருவருக்கு அவரது உடல் ,எண்ணம் போன்றவற்றில் கட்டுப்பாடு கொண்டு வருவதற்காகவே ஏற்படுத்தப் பட்டது. அதை விட்டு எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் இணங்காமல் இருமுடி எடுத்து பயணம் மேற்கொள்வதைக் காணும்போது உண்டான ஆதங்கமே பதிவு எழுத வைத்தது. ஒரேயடியாக சபரி மலைக்குச் செல்வதைக் குறை கூறவில்லை.என் பதிவு படித்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. ,

    ReplyDelete
  10. உங்கள் மனம் புரிகிறது. சபரிமலை ஒரு கண்மூடி வியாபாரம். அதில் எனக்கு சந்தேகமே இல்லை - மூன்று முறை பயணம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அக்கிரமங்களைக் கண்ணால் பார்த்து மனதால் வெந்திருக்கிறேன். கடவுள் என்ற போர்வையைப் போட்டு கண்மூடித்தனத்தை மூடிவிட்டால் எதிர்ப்பவர்கள் அரக்கர்களாகி விடுகிறார்கள். உண்மை பகதர்கள் என்று எதுவுமே/யாருமே இல்லை என்பது என் கருத்து. உண்மை மனிதர்களுக்கு சபரிமலைப் பயணம் ஒரு தேடல், ஒரு வடிகால் - அவ்வளவு தான். அந்தக் கண்ணோட்டத்தில் எந்தப் பயணமும் - தன்னை எளிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய எந்தப் பயணமும் - சபரிமலை, பழனி, ஹஜ், ஜெரூசலம், லென்ட் தொட்ட வேடிகன்... எதுவாக இருந்தாலும் - தன்னையறியும் நிறைவளிக்கும் ஒரு தேடலுக்கான முயற்சி. பக்தி எல்லாம் பகட்டு. அதைப் புரிந்து கொள்ளாதவர்கள் கண்மூடிகள். நண்பர்களானாலும் சரியே. 'உண்மை பக்தர்க'ளும் நல்ல மனிதர்கள் தாம் என்று எண்ணும் பொழுது நம் கருத்துக்களை நாம் பொதுவில் வைத்தே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. சொன்னாலும் பயனில்லை என்றும் தோன்றுகிறது.

    இன்னும் நூறு வருடங்களில் சபரிமலை பயணம் போன்றவை நடைபெறாது என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது.

    ReplyDelete
  11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்

    வலைச்சர தள இணைப்பு : !நெஞ்சில் உலா!!!

    ReplyDelete